அக்னி நட்சத்திர 'கத்திரி' வெயில் முடிந்தது!
சென்னை: கடந்த 4ம் தேதி துவங்கி தமிழக மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் ஒரு வழியாக இன்றுடன் முடிவடைந்தது.
அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ல் துவங்கினாலும், சென்னையில் வெயிலின் உக்கிரம் ஏப்ரல் கடைசியில் இருந்தே அதிகம் காணப்பட்டது. மே மாத துவக்த்தில் 100 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்த வெயில் 13ம் தேதி அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டு மக்களை வாட்டியது.
வேலூரில் அக்னி நட்சத்திரம் நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை அறவே தவிர்த்து விட்டனர். இங்கு ஏப்ரல் ஆரம்பத்திலே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிபிடித்து, மக்களை பல வகையான வெக்கை நோய்களுக்கு ஆளாக்கியது.
அங்கு ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 20 நாட்கள் உஷ்ணம் 100 டிகிரி பாரன்ஹீட்டை விட்டு இறங்காமல் இருந்தது. அதிகபட்சமாக மே 12ம் தேதி வெப்பம் 111 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.
இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்தது. அதுவும் மே இரண்டாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் வெயிலின் அகோரம் அதிகமிருந்தது.
மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர் என அனைத்து ஊர்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
மே 4ம் தேதி துவங்கிய கத்திரி வெயில் 24 நாட்கள் நீடித்து ஒரு வழியாக இன்றுடன் முடிவடைந்தது.