விமான பணிப்பெண் கொலை-செல்போன் திருடன் கைது

சென்னை கோல்டன் ஜெ.ஜெ.நகரில் வசித்து வந்த ஏர் இந்தியா நிறுவன விமான பணிப் பெண்ணான நித்ய குமாரி (25) கடந்த சனிக்கிழமை இரவு மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் வீட்டை போலீசார் உடைத்துப் பார்த்தபோது அவர் பிணமாகிக் கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும் என்று தெரியவந்தது.
இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
நித்ய குமாரியின் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் இரண்டு மொபைல்கள் சோதனையிடப்பட்டன. இதில் அவருக்கு மும்பையை சேர்ந்த ரஜாத் சிங் என்ற காதலர் இருப்பது தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர்.
ஆனால், அவருக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று தெரியவந்தது.
இந் நிலையில் நித்ய குமாரியின் இன்னொரு செல்போன் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் அந்த எண்ணை யாரோ தொடர்ந்து பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்தது.
நித்ய குமாரியின் மரணத்துககுப் பின் அந்த எண்ணிலிருந்து பேசப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
அதில் நித்யகுமாரி தங்கியிருக்கும் வீட்டிலிருந்து 3வது குடியிருக்கும் முகமது இஸ்மாயில் (23) என்பவரின் வீட்டு தொலைபேசி எண்ணிற்கு இந்த எண்ணிலிருந்து சில அழைப்புகள் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் இஸ்மாயிலிடம் விசாரணை நடத்தினர். அவர் ஏற்கனவே சில செல்போன்கள் திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று தெரியவந்தது. எனவே அவர் மீது சந்தேகம் அதிகமானது.
அவரை போலீசார் தங்களது ஸ்டைலில் விசாரித்தபோது நித்யகுமாரியை செல்போனுக்குகாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
நித்ய குமாரி விலையுயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வந்ததைப் பார்த்து அவற்றை திருடுவதற்காக கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டிற்கு இஸ்மாயில் சென்றுள்ளார்.
வீட்டுக்குள் நுழைந்து செல்போன்களை எடுத்துக் கொண்டு வெளியேற முயன்றபோது இஸ்மாயிலைப் பிடித்த நித்ய குமாரி உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் இஸ்மாயில். அவரது உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்துவிட்டு கையில் கிடைத்த செல்போன், ஐ பாட் மற்றும் 500 ரூபாயை திருடிக் கொண்டு வீட்டையும் வெளியிலிருந்து பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இன்று புதிய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார் இடமாற்றம் செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications