திமுக எம்.பி ரித்தீஷுக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு
மதுரை: கலாட்டா வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற திமுக எம்.பி. ரித்தீஷுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மதுரை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
2008ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை விழா நடந்தது.
அப்போது அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், ரித்தீஷ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவினரைத் தாக்கியதாக கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கமுதி கோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. ஆனால் ரித்தீஷ் நிபந்தனையைக் கடைப்பிடிக்கவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகினார் ரித்தீஷ். அங்கு அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு நடந்தபோது ரித்தீஷ் வெறும் நடிகர் மட்டுமே. ஆனால் தற்போது அவர் எம்.பியாகி விட்டார். இதனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதால் தனது நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரி ரித்தீஷ் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பரிசீலித்த நீதிபதி ராஜ இளங்கோ, ரித்தீஷுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications