பெண் போலீசை பலாத்காரம் செய்த எஸ்ஐ சரண்
நெல்லை: பெண் போலீசை திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்து ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் நெல்லை நீதிமன்றத்தில் சரணைடந்தார்.
நெல்லை மாவட்டம் கண்ணன்குளத்தை சேர்ந்தவர் செந்தில்வேல்குமார். இவர் தாழையுத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஆண்டு இவர் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றபோது தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்த செல்வி என்ற பெண் போலீசும் அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு இருவரும் பேசி கொண்டனர். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி செந்தில்குமார் திருமணம் செய்வதாக கூறி செல்வியை திருச்செந்தூருக்கு வரவழைத்தார். திருச்செந்தூருக்கு வந்த செல்வியிடம் ஆசை வார்த்தை கூறி செந்தில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் சில காரணங்கள் கூறி திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார்ய இந் நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்வி நெல்லை டிஐஜி கண்ணப்பனிடம் புகார் அளித்தார்.
டிஐஜி கண்ணப்பன் உத்தரவின் பேரில் 6.3.2009ல் தூத்துக்குடி குற்றபிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதை தொடர்ந்து செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் அவர் சமீபத்தில் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், தான் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைய போவதாகவும், அதன் பின்னர் தனக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று நெல்லை தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் (பொறுப்பு) நீதிபதி ராஜூ முன்னிலையில் சரணடைந்தார்.
அப்போது தூத்துககுடி முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்து போட வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் பிணை தொகை செலுத்தி இருநபர் ஜாமினில் செல்ல செந்தில்குமாருக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.