Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனித உரிமை மீறல்-இலங்கை எதிர்ப்பு நாடுகளுக்கு தோல்வி

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை புகார்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் இலங்கையின் தீர்மானம் அங்கு வெற்றி பெற்றது.

இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் சுவிட்சர்லாந்து தலைமையில் பல நாடுகள் அணி திரண்டன.

பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக திரண்டன. ஆனால் இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற பல முக்கிய நாடுகள் இலங்கைக்கு முழு ஆதரவைத் தெரிவித்தன.

இந்த நிலையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவுதல் என்ற பெயரில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தது இலங்கை. இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தின்போது இலங்கைக்கு எதிரான போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்த வாதங்களை முன்வைத்தன இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்.

சூடான விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடந்தது. அதில், இலங்கையின் தீர்மானத்திற்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. 6 பேர் நடுநிலை வகித்தனர்.

தீர்மானம் வெற்றி பெற்றது குறித்து ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜெயதிலகே கூறுகையில், மனித உரிமைக் கவுன்சில் தனது எண்ணத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக ஏற்கனவே தாக்கல் செய்திருந்த தீர்மானத்தில் கடைசி நேரத்தில் இலங்கை திருத்தங்களை மேற்கொண்டது. அதேபோல, மேலும் 9 திருத்தங்களைச் செய்ய ஜெர்மனி வலியுறுத்தியது. ஆனால் இதை கியூபா கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து இலங்கை கொண்டு வந்த திருத்தங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு வாக்கெடுப்புக்கு விட்டது கவுன்சில்.

மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம்..

இதற்கிடையே, கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின் போர்க் குற்றம் குறித்து விசாரிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அது கூறுகையில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் காலவரையற்ற பட்டினி உள்ளிட்ட பிரச்சினைகளில் அவதிப்பட்டு வருவது குறித்தும் கவுன்சில் கூட்டத்தில் ஒரு கவலை கூட தெரிவிக்கப்படவில்லை.

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் நிராகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மனித உரிமை மீறல்கள் குறித்தும் அது கவலைப்படவில்லை.

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பட்டு வரும் அவதிக்கு ஒரு கவலை கூட தெரிவிக்காமல் கூட்டம் முடிந்திருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது.

விடுதலைப் புலிகள் தரப்பில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளது கவுன்சில். இலங்கை அரசின் செயல்கள் குறித்து அது பாராமுகமாக இருந்து விட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் மீது குண்டுகளை வீசிக் கொன்ற ஒரு அரசை பாராட்டி மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தை வெற்றி பெற வைத்திருப்பது மிகவும் ஏமாற்றமாக உள்ளது.

இடம் பெயர்ந்த அப்பாவி மக்களின் நலம், மனித உரிமை பாதுகாப்பு ஆகியவை குறித்து பெரும் கேள்விக்குறிகளை எழுப்பி விட்டது இந்த தீர்மானம்.

இலங்கைக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் அடங்கிய தீர்மானத்தைக் கொண்டு வர விடாமல் இந்தியா, பிரேசில், பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் தடையாக இருந்து விட்டன.

இதுதொடர்பான தீர்மானத்துடன் இருந்த அர்ஜென்டினா, போஸ்னியா-ஹெர்ஸகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, மொரீஷியஸ், மெக்சிகோ, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, ஸ்லோவேகியா, தென் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன், உருகுவே ஆகிய நாடுகளைப் பாராட்டுகிறோம்.

குறிப்பாக இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானத்தைக் கொண்டு வர பாடுபட்ட அர்ஜென்டினா, சிலி, செக் குடியரசு, மொரீஷியஸ், மெக்சிகோ, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

ஆனால் இவர்களுக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தராதது வருத்தத்திற்குரியது.

மேலும், இலங்கை அரசை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பகிரங்கமாக பாராட்டியதும் பெரும் ஏமாற்றம் தருகிறது. இதன் மூலம் இலங்கை அரசின் செயல்கள் சரியானவையே என்ற அர்த்தம் ஏற்பட்டு விட்டது என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஓட்டு போட்ட இந்தியா!

இலங்கையின் தீர்மானம் வெற்றி பெற இந்தியாவும் ஒரு முக்கிய காரணம். இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை தொடர்பாக ஐநா மனித உரிமை குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா ஓட்டு போட்டது.

நேற்று இரவு இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 47 நாடுகள் இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொண்டன. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட 22 நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டன.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட அமெரிக்க நாடுகள் என 17 ஓட்டுகள் விழுந்தன.

இதையடுத்து அந்த தீர்மானம் தோல்வியடைந்தது. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கை நிறைவேறாமல் போனது.

இதே கூட்டத்தின் போது இலங்கை போர் முடிந்ததை அடுத்து மறுசீரமைப்புக்காக சர்வதேச நாடுகள் நிதி உதவி வழங்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்தது. அதன் மீது தீர்மானம் போடப்பட்டு, ஓட்டெடுப்புக்கு வந்தது.

இதுவும் வெற்றி பெற்றது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 12 நாடுகள் எதிர்த்து ஓட்டு போட்டன. 6 நாடுகள் நடுநிலை வகித்தன.

பாதிக்கு மேலான ஓட்டுக்களை பெற்றதை அடுத்து இலங்கைக்கு இனி சர்வதேச நிதியுதவி தாராளமாக கிடைக்கும்.

இந்த வெற்றிகளால் இலங்கை பங்குச் சந்தையில் வர்த்தகம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அனைத்து சர்வதேச அமைப்புகளாலும் கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட, இனப்படுகொலை நடந்ததாக பல்வேறு அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைக்கு ஆதரவாக இனி தாராளமாக சர்வதேச நிதியுதவி கிடைக்க இந்த தீர்மான வெற்றிகள் வழி வகுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+