ஹைதராபாத் தொழிலதிபரை மணக்கிறார் சானியா
டெல்லி: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சோரப் மிர்சா என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.சர்வதேச டென்னிஸ் உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சானியா மிர்சா. டென்னிஸ் தர வரிசையில் டாப்-30க்குள் இடம்பிடித்த ஒரே வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
விளையாட்டு திறமையாலும், பளிச்சிடும் அழகாலும் இந்திய டென்னிஸ் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
சமீபகாலமாக காயம் காரணமாக பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறார். தற்போது பிரெஞ்ச் ஓபன் தொடரில் விளையாடி வரும் அவர் ஒற்றையரில் முதல் சுற்றிலே தோல்வியடைந்த போதிலும், இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில்,
சானியாவுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சோரப் மிர்சாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சோரப் குடும்பம் எங்களுக்கு உறவு இல்லை. என்றாலும் இரண்டு குடு்ம்பத்தினரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வருகிறோம்.
இவர்களது திருமணத்தை உடனே நடத்தும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை. சானியா தொடர்ந்து டென்னிஸ் விளையாடுவார். ஆர்வம் இருக்கும் வரை அவர் விளையாடுவார். திருமணம் எப்போது என்பதை சில காலம் கழித்து முடிவு செய்வோம் என்றார் இம்ரான் மிர்சா.
இந் நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூலை 10ம் தேதி நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.