கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
கோவை: கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜூன் 20-ம் தேதி நடைபெற இருப்பதாக பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் விடுத்துள்ள அறிக்கை:
கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. பாஸ்போர்ட் தொடர்பாக மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 20ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
நிலுவையில் இருக்கும் பாஸ்போர்ட்களை வழங்க இக்கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, இது தொடர்பான மனுக்களை,
பாஸ்போர்ட் அலுவலர்,
பாஸ்போர்ட் அலுவலகம், முதல்தளம்,
மாநகராட்சி வணிக வளாகம், அவிநாசி சாலை,
கோயம்புத்தூர்-641018
என்ற முகவரிக்கு ஜூன் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மனு அனுப்பும் உறையின் மீது "பாஸ்போர்ட் அதாலத்' என்று குறிப்பிட வேண்டும். மார்ச் மாதம் வரை பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள் மனுக்களை அனுப்பலாம்.
குறிப்பாக, குறைதீர் கூட்டத்துக்கு வரும்போது பாஸ்போர்ட் விண்ணப்ப எண், தேதி, மனுதாரரின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண், தங்களது குறை குறித்த விவரம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். சம்பந்தப்பட்ட மனுதாரரிடம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications