தூத்துக்குடியில் ஆயுத கழிவு மூட்டைகள்-இலங்கையில் பயன்படுத்தியதா?
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 5 மூட்டைகள் ஆயுத கழிவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது இலங்கை போரில் பயன்படுத்தியதாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி, தருவைகுளம் அருகேயுள்ள தெற்கு கள்மேடு பகுதியில் கள்ளாடி ஆறு என்ற ஓடை உள்ளது. இந்த ஓடையில் நேற்று முன்தினம் மாலை 5 சாக்கு மூட்டைகள் கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக உதவியாளர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தருவைகுளம் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 மூட்டைகளையும் கைப்பற்றி சோதனை நடத்தினர். இதில் சுமார் 350 கிலோ எடையுள்ள துப்பாக்கிகள், தோட்டாக்கள், ரைபிள்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்ட காலி உறைகள் இருந்தன. இவை அனைத்தும் செம்பு, மற்றும் தகரம், இரும்பால் செய்யப்ட்டிருந்தது.
இதனை கைப்பற்றிய போலீசார் இவை இங்கு எப்படி வந்தது, பழைய இரும்பு வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கிறார்களா, அல்லது இலங்கை போரில் பயன்படுத்தப்பட்டதா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளத்துர் அருகேயுள்ள கண்மாயில் 3 மூட்டை ஆயுத கழிவுகள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட ஆயுத கழிவுகளை பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையில் ஆயுத கழிவுமூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications