சென்னையில் 2வது நாளாக கடல் கொந்தளிப்பு-மீனவர்கள் தவிப்பு
சென்னை: சென்னையில் இன்றும் இரண்டாவது நாளாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சில கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.
சென்னையில் நேற்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. நகரம் முழுவதும் பலத்த சூறைக் காற்று வீசியது.
சுமார் 20 அடி உயரத்தில் ராட்சத அலைகள் எழுந்து, கரையில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளையும், கட்டுமரங்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்றன. பின்னர் பல மடங்கு அதிக வேகத்தில் அவை கரை ஒதுக்கின. இதில் பல படகுகள் சேதமடைந்தன.
திருவொற்றியூர், மெரினா, நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. பல பகுதிகளில் கிராமங்களுக்கு நீர் புகுந்தது.
இந் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் எண்ணூர், எர்ணாவூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம் ஆகிய கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
கடலின் சீற்றம் மீண்டும் அதிகரித்ததை அடுகத்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் கடல் சீற்றம் ஏற்படும். ஓரிரு நாட்களுக்கு பின் சீற்றம் குறைந்து கடல் சகஜ நிலைக்கு திரும்பிவிடும். இதை மீனவர்கள் 'வைகாசி வாங்கல்' என அழைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications