அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு புதுப் பதவி!
சென்னை: தமிழக அரசின் நல வாரியங்களின் பணிகளை ஒருங்கிணைத்து அவற்றைக் கண்காணித்து ஆய்வு செய்யும் ஒருங்கிணைப்பாளராக மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் ஆற்காடு வீராசாமி. ஆனால், இப்போது முதல்வர், நிதியமைச்சருக்கு அடுத்த நிலையில் துணை முதல்வர் ஸ்டாலின் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீராசாமிக்கு இந்தப் புதிய பதவி தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் இதுவரை அரசு சார்பில் விவசாயத் தொழிலாளர் மற்றும் விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், தூய்மைப் பணிபுரிவோர், மீனவர், சீர்மரபினர், நரிக்குறவர், தையல் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர்கள், அரவாணி கள், ஊனமுற்றோர், வணிகர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், உலமாக்கள், போன்றவர்களுக்காக தனித் தனியே 28 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத்திற்கு குமரி அனந்தன், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியத்திற்கு சேம. நாராயணன் தலைவர்களாக ஏற்னவே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இது தவிர, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் -விவசாயிகள் நல வாரித்தியத்திற்கு முழு நேரத் தலைவராக கே.பி.ராமலிங்கம், இந்த வாரியத்தின் இணை தலைவராக கு.செல்லமுத்து, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் முழு நேர தலைவராக பொன். குமாரையும் நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
கே.பி.ராமலிங்கம் தலைமையில் இயங்கவுள்ள தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் நலவாரியம், பொன்.குமார் தலைமையில் இயங்கவுள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், குமரி அனந்தன் தலைமையில் இயங்கி வரும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் சேம.நாராயணன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியம் ஆகிய 4 நல வாரியங்கள் தவிர,
மற்ற வாரியங்களை ஆய்வு செய்யவும், ஆக்கப் பணியாற்றவும் ஏற்கனவே உள்ள வாரியங்களுடன் தொடர்புடைய துறை அமைச்சர்களுடன் இணைந்து மேற்பார்வையிட்டு, கண்காணிக்கும் ஒருங்கிணைப்பாளராக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி ஆணை வெளியிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.