பெங்களூரில் இறங்காமல் சென்னைக்கே திரும்பிய விமானம்
சென்னை: பெங்களூரில் மோசமான வானிலை நிலவியதால், அங்கு தரை இறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது கிங்பிஷர் விமானம்.
நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையிலிருந்து அந்த கிங்பிஷர் விமானம் பெங்களூருக்கு கிளம்பியது. பெங்களூரை அடைந்த நிலையில் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானத்தால் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து சிறிது நேரம் வானில் சுற்றிய விமானம், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து மாலை 4.15 மணியளவில் இறங்கியது விமானம். பெங்களூர் வரை போய் அங்கு இறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியதால் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து ஒரு விமானி கூறுகையில், கொச்சி, பெங்களூர் போன்ற பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்யும் காலமாகும். இதனால் இதுபோல விமானங்கள் திருப்பி விடப்படுவது சகஜமானதுதான்.
விமானிகள் விமானத்தை கிளப்புவதற்கு முன்பே வானிலை அறிக்கை தரப்படுவது வழக்கம்தான். ஆனால் வானிலை சரியாகி விடும் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் செல்கிறோம். இருப்பினும் இறங்க முடியாத நிலை ஏற்படுகிறபோது இதுபோல திரும்ப நேரிடுகிறது என்றார்.
சமீபத்தில் இதேபோலத்தான் மங்களூலிருந்து கொச்சி போன விமானம் ஒன்றும் திருப்பி விடப்பட்டதாம்.
ஆனால் பெங்களூர் வரை போய் சென்னை திரும்பிய விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு, தாங்கள் மீண்டும் சென்னைக்கே திரும்பிச் செல்வது குறித்து தெரிவிக்கப்படவில்லையாம். மொத்தம் 34 பயணிகள் விமானத்தில் இருந்தனர்.