ஸ்டாலினுக்கு பல காலத்திற்கு முன்பே இந்தப் பதவி கிடைத்திருக்க வேண்டும் - கருணாநிதி
சென்னை: ஸ்டாலினுக்கு இப்போது 50 வயதுக்கு மேல் ஆகி விட்டது. முன்பே அவருக்கு இந்தப் பதவி கிடைத்திருக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.
அறிவாலயத்தில் தன்னை சந்தித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும்...
சிறையில் அடிபட்டதை விடவா இது பெருமை..?
கேள்வி: மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கியிருக்கிறீர்கள்...
பதில்:- மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரையில் 1976-ம் ஆண்டு நெருக்கடி காலத்தில் ஒரு ஆண்டு காலம் மிசா கைதியாக இருந்து சிறைச்சாலையிலே அடிபட்டாரே, அதைவிட பெருமையாக அவர் இந்த பதவியை கருதமாட்டார்.
கேள்வி: ஸ்டாலினை பொறுத்தவரை அடுத்த கட்டம் என்ன?
பதில்: தன்னிடம் உள்ள கோப்புகளை பார்ப்பதுதான்.
நிருபர்களின் வாரிசுகள் வருவதை தடுப்பீர்களா..?
கேள்வி: ஒரே குடும்பத்தில் பல பேர் அதிகாரத்தில் அமர்வதைப் பற்றி?
பதில்:- இந்தியாவில் இருக்கிற அரசியல் தலைவர்களையெல்லாம் அலசிப் பார்த்து கணக்கெடுத்தால் எத்தனை அரசியல் தலைவர்களுடைய குடும்பங்களில் அவர்களுடைய வழித்தோன்றல்கள் அதாவது வாரிசுகள்-அவர்களை தொடர்ந்து இது போன்ற பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்கள் என்பது புரியும்.
காஷ்மீரில் ஷேக் அப்துல்லா- அவருக்கு பிறகு அவருடைய மகன் பரூக் அப்துல்லா- அவருக்கு பிறகு உமர் அப்துல்லா என்று இப்படி ஒரு பட்டியலே இருக்கிறது.
அவ்வளவு தூரம் போவானேன்-ராஜாஜியின் மகன் சி.ஆர்.நரசிம்மன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். நீங்களே நிருபராக இருக்கிறீர்கள், உங்களைப்போலவே தேர்ச்சி பெற்று உங்கள் பேரன் பேத்திகளோ நிருபர்களாக வந்தால் அவர்களை விரட்டி விடுவீர்களா?
கேள்வி: மு.க.ஸ்டாலின் துணை முதல்வரானது பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் என்ன சொன்னார்கள்?
அப்போது அருகில் இருந்த ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு, நாங்கள் எல்லாம் மகிழ்ச்சி தெரிவித்தோம்.
கேள்வி: ஒரு தந்தையாக நீங்கள் எப்படி இதை உணருகிறீர்கள்? குறுகிய காலத்தில் இளம் வயதில் துணை முதல்வராக ஆக்கியிருக்கிறீர்களே?
பதில்: அவருக்கு வயது 50-க்கு மேல் ஆகிறது. அவர் இந்த பதவியை பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications