அன்புமணி கட்டுப்பாட்டை நீக்கினார் ஆசாத்-சினிமாவில் தம் அடிக்க தடை இல்லை!
டெல்லி: இந்தி சினிமாவில் கற்பழிப்பும், வன்முறையும் தாண்டவமாடி வருகிறது. இதை விடவா புகை பிடிக்கும் காட்சிகள் சமூகத்தை சீரழித்து விடப் போகிறது. எனவே இதுபோன்ற அமல்படுத்துவதற்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை நான் கடைப்பிடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்.
கடந்த அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், ரஜினிகாந்த், ஷாருக் கான் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். அத்தோடு நில்லாமல் சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை தடை செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
அன்புமணியின் கோரிக்கையை உடனே ஏற்ற ரஜினிகாந்த், புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதையே விட்டு விட்டார். அவரைப் பின்பற்றி விஜய்யும் கூட அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார்.
ஆனால் மும்பை திரையுலகினர் அன்புமணி உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஷாருக்கானுக்கும், அன்புமணிக்கும் இடையே கடும் வாதமே நடந்தது. ஷாருக் கான் தொடர்ந்து தம் அடித்துக் கொண்டுதான் உள்ளார். ஸ்டேடியங்களில் தம் அடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் மூலம் திரையுலக ஹீரோக்களுக்கு 'ஆசாத்' கிடைத்துள்ளது. புதிய சுகாதாரத் துறை அமைச்சராகியுள்ள குலாம் நபி ஆசாத், நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை தான் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை தடுப்பது என்பது அறிவீனமான செயல் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. அதற்கும், புகை பிடித்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்தி சினிமாக்களில் கற்பழிப்பும், வன்முறையம் தாண்டவமாடுகிறது. அவற்றை விடவா புகை பிடித்தலால் ஒரு சமூகம் கெட்டுப் போய் விடப் போகிறது.
புகை பிடிப்பது போன்ற காட்சிகளைக் காட்டுவதால் இளைஞர்கள் கெடுவார்கள் என்றால், கற்பழிப்பு, வன்முறை காட்சிகளைப் பார்த்தால் யாரும் கெட மாட்டார்களா. இது அறிவீனமான வாதம்.
அதற்குப் பதில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்து அதை தீவிரமாக கடைப்பிடிக்கலாம். புகை பிடித்தலால் ஏற்படும் தீமைகள் குறித்து தீவிரமாக பிரசாரம் செய்யலாம்.
எனவே, இதுபோன்ற சாத்தியமே இல்லாத கொள்கைகளை எனது துறை கடைப்பிடிக்காது என்று கூறியுள்ளார் ஆசாத்.
குலாம் நபி ஆசாத்தின் இந்த பேச்சு, புகை பிடித்தலுக்கு எதிராக பாடுபட்டு வரும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் கடும் அதிருப்தியைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேசமயம், ஷாருக் கான் இனிமேல் நிம்மதியாக தம் அடிக்கலாம்!












Click it and Unblock the Notifications