400 விடுதலைப் புலிகள் ஊடுறுவல்-சோனியா, ராகுல் தமிழகம் வர வேண்டாம் என எச்சரிக்கை
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கடை நிலைப் போராளிகளே இவ்வாறு ஊடுறுவியிருக்கலாம் எனவும், அகதிகள் முகாம்களில் இவர்கள் அகதிகள் போல தங்கியிருக்கலாம் எனவும் உளவுப் பிரிவு தகவல்கள் கூறுகின்றன.
இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில கடலோரப் பகுதிகளில் தீவிர உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முகாம்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் நடமாடுகிறார்களா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளைக் கொண்டவர்கள் பலத்த பாதுகாப்புடன் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். மற்றவர்கள் மட்டுமே திறந்த வெளி முகாம்களில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் சில முக்கிய தலைவர்களைக் காணவில்லை என்று இலங்கை அரசே கூறியுள்ளது. குறிப்பாக உளவுப் பணிகளில் கில்லாடியான பொட்டு அம்மான் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
சோனியா - ராகுலுக்கு எச்சரிக்கை..
இந்த நிலையற்ற நிலை காரணமாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இப்போதைக்கு தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் உளவுப் பிரிவு அதிகாரிகள் அவர்களை எச்சரித்துள்ளனராம்.