ரூ. 25 லஞ்சம்-20 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு!
டெல்லி: கடந்த 1989ம் ஆண்டு ரூ. 25 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சுபைர் என்ற கேரளாவை சேர்ந்த அரசு ஊழியர் குற்றமற்றவர் என்று 20 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவை சேர்ந்த சுபைர் என்பவர் கடந்த 1989ம் ஆண்டு அம்மாநிலத்தில் உள்ள துணை மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றினார். அப்போது அவர் மனாப் என்பவரிடம் ரூ. 25 லஞ்சம் வாங்கியதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு தொடுத்து ஏப்ரல் 24, 1989ம் ஆண்டு அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் கொச்சினில் இருக்கும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அங்கும் அவர் எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சர்புர்கர் மற்றும் லோதா அடங்கிய பெஞ்ச் அவர் நிரபராதி என தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்,
அரசு தரப்பு கொடுத்த சாட்சிகள் போதுமானதாக இல்லை. தரமற்ற, நம்பகத்தன்மை இல்லாத இது போன்ற சாட்சியங்களை வைத்து கொண்டு ஒருவர் மீது குற்றம்சாட்ட முடியாது. இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து ரூ. 25 லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சுபைர் 20 ஆண்டுகளுக்கு பின் தன் மீது சுமத்தப்பட்ட பழியில் இருந்து விடுதலை ஆனார்.