ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க முயற்சியா?
மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுவது தனியார்மயமாக்கலை ஊக்கப்படுத்த அல்ல. மாறாக நிறுவனத்துக்குத் தேவையான அதிகபட்ச முதலீட்டைப் பெறவும் நிதி நெருக்கடியில் சிக்கி மற்ற நிறுவனங்களைப் போல தடுமாறாமல் இருப்பதற்காகவுமே என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் புதி்ய பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
காரணம் கடந்த ஆண்டு மட்டும் இந்த அரசுத் துறை விமான நிறுவனத்துக்கு ரூ. 4,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலை ஏற்றம், பயணிகள் குறைவு போன்றவற்றால் இந்த நிலை. இதைச் சரிகட்ட இந்த ஆண்டு புதிய முதலீடுகளைச் செலுத்த முடிவு செய்த ஏர் இந்தியா, இதற்காக ரூ. 1,231 கோடிக்கு புதிய பங்குகளை வெளியிடவும், ரூ. 2750 கோடிக்கு புதிய கடன்கள் வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு திட்ட வரைவை அனுப்பியது.
இதில் சில திருத்தங்களைச் சொன்ன மத்திய அரசு, இப்போதைக்கு புதிய பங்குகள் வெளியிட மட்டும் அனுமதி கொடுத்துள்ளது. புதிய கடன்கள் குறித்து சில ஆட்சேபங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், விமான நிறுவனத்தை தனியாருக்கு முற்றாக தாரை வார்க்கும் முயற்சி இது என பலவித விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது:
ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க நாங்கள் முயலவில்லை. இந்த பங்கு வெளியீடு மூலம் ஏர் இந்தியா தனது மூதலீட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் பங்குகளை சந்தையில் விடுவது உடனடியாக நடந்துவிடாது. பங்குச் சந்தை நிலையாக மாறிய பிறகே நடக்கப் போகிறது.
சொல்லப் போனால், இனி எந்த விமான நிலையத்தையும் தனியார்மயமாக்குவதில்லை என்ற புதிய முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். ஏர் இந்தியா எப்போதும் அரசுத் துறை நிறுவனமாகவே தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications