ராமதாஸ் மீது குண்டாஸ் கோரும் புரட்சி பாமக
மதுரை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புரட்சி பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, புரட்சி பாமக கட்சி சமூக பணி பேரவை மாநில நிர்வாக தலைவர் வக்கீல் ஆபிரகாம் ராயன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்ற தேர்தலில் போலியான ஏமாற்று வாக்குபதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் தயார் செய்து தேர்தலை நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் பயங்கரமானதாகும்.
இந்த குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். ராமதாசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
போலியான வாக்குபதிவு இயந்திரம் என கூறி ஒட்டுமொத்த நாடாளுமன்ற தேர்தலே தவறானது என்ற பீதியை அவர் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளார். இது ஜனநாயக முறைப்படி கண்டனத்திற்குரியது என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.