கவிமணி படித்த பள்ளிக்கு பூட்டு
கன்னியாகுமரி: தமிழ் கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் படித்த அரசு தொடக்கப்பள்ளி இன்று கேட்பாரற்ற நிலையில் மூடி கிடக்கிறது. இதை தமிழக அரசு திறந்து வைத்த அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்த முக்கிய தமிழ் அறிஞர்களில் கவிமணி தேசியவிநாயக பிள்ளையும் ஒருவர். தனது கவிபுனையும் திறமையால் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
எளிமைக்கு சொந்தக்காரர். ஏராளமான கவிதை, மற்றும் கட்டுரை நூல்களை தமிழர்களுக்கு தந்தவர். இவரது ஆசிய ஜோதி என்று நூல் இவருக்கு அழியா புகழை தேடி தந்தது. இதையடுத்து இவரது தமிழ் சேவையை பாராட்டி 1940ல் சென்னையில் நடந்த 7வது தமிழ் சங்க ஆண்டு கூட்டத்தில் கவிமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஆனால், இன்று இவர் படித்த தேரூர் அரசு தொடக்கப் பள்ளிக்கூடம் மாணவர்கள் இல்லாமல் எலிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பாதாக காரணம் காட்டி அரசு கல்வித்துறை 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த பள்ளியை இழுத்து முடிவிட்டது.
கடந்த 1868ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பள்ளி கூடம் தற்போது தேர்தல் சமயங்களில் மட்டும் வாக்கு சாவடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவர்கள் பூரிப்புடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இப்பள்ளி மட்டும் குழந்தைகளின் அன்பிற்கு ஏங்கி தவிக்கும் முதியவர் போல சோகத்துடன் காட்சி அளிக்கிறது.
தமிழக அரசின் பாட புத்தங்களில் கவிமணியின் வாழ்க்கை வரலாறு பாடமாக இடம்பெற்று வரும் நிலையில் அவர் படித்த பள்ளிகூடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications