கோவையில் இருவருக்கு ஸ்வைன் ப்ளூ?-மேலும் சில தகவல்கள்
கோவை: அமெரிக்காவில் இருந்து கோயம்புத்தூர் வந்த மூன்று பேருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பதற்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம முழுவதும் உள்ள 55 நாடுகளில் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. இதுவரை இந்த நோய் தாக்கி அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் 100 பேர் வரை இறந்துள்ளனர். மேலும் சுமார் 15 ஆயிரத்து 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஸ்வைன் ப்ளூவை தடுக்க இந்தியா முழுவதும் உள்ள 21 சர்வதேச விமான நிலையங்களில் சுமார் 221 டாக்டர்கள் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர். நேற்று மட்டும் சுமார் 47 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து பின்னர் கோயம்புத்தூர் திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு என மூன்று பேருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பது தெரிய வந்தது.
தற்போது அது குறித்து மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த தாய்க்கு வயது 34 என்றும், அவரது மகனுக்கு வயது ஐந்து என்றும், மகளுக்கு வயது 8 என்றும் தெரிய வந்துள்ளது. என்றாலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் அந்த 8 வயது பெண் குழந்தைக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அந்த பெண் கோடை விடுமுறைக்காக குழந்தைகளை அழைத்துக் கொண்டு அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் வேலை பார்க்கும் தனது கணவரை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் தான் அவர்களுக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இது சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், தற்போது அவர்களுக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது. என்றாலும் அவர்களது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அவர்களுடன் பயணம் செய்தவர்கள் மற்றும் பழகிய அனைவரையும் சோதனை செய்துள்ளோம் என்றனர்.