விபத்தில் குழந்தையை காப்பாற்றி உயிரைவிட்ட தாய்
ஆழ்வார்திருநகரி: நெல்லை மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே நடந்த விபத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் பலியானார்.
நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா ஆழ்வார்திருநகரி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்லையா மகள் அருணா. இவருக்கு இரண்டு வயதில் அஜய் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் ஊரில் திருவிழா நடப்பதால் அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு அருணா, அவரது தாயார் புஷ்பம் மற்றும் குழந்தை அஜய் ஆகிய மூன்று பேரும் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பொட்டல்புதூருக்கு சென்றனர்.
அங்கு பொருட்களை வாங்கி விட்டு பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கடையத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி வழியாக பாப்பான்குளம் செல்லும் மினி பஸ்சில் ஏறினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அருணா குழந்தையை இடுப்பில் வைத்து கொண்டு பஸ்சின் படிக்கட்டில் கம்பியை பிடித்தபடி நின்றபடி பயணம் செய்து கொண்டிருந்தார்.
வேகமாக சென்று கொண்டிருந்த மினி பஸ், ஆழ்வார்குறிச்சி அருகே இசக்கியம்மன் கோவில் பக்கத்தில் இருந்த வளைவில் திரும்பும்போது அருணா கம்பியின் பிடியை தளரவிட்டார். இதில் நிலைதடுமாறி குழந்தையோடு ஓடும் பஸ்சில் இருந்து ரோட்டில் விழுந்தார்.
அப்போது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மல்லாந்த நிலையில் விழுந்துள்ளார். அவர் விழுந்ததை பார்த்த பயணிகள் கூச்சல் போட்டு பஸ்சை நிறுத்தினார்.
கீழே விழுந்த அருணா பின்தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். குழந்தை லேசான காயத்தோடு அழுது கொண்டிருந்தது. உடனே அருணாவை ஆழ்வார்குறிச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக அம்பை கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தன்னை பற்றி கவலைப்படாமல் குழந்தையை காப்பாற்றிவிட்ட இளம்பெண் இறந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.












Click it and Unblock the Notifications