துபாயில் தமிழக வாலிபர் மரணம்-உடல் வருமா?
தென்காசி அருகேயுள்ள கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கொழும்பு செட்டியார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவர் கடந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி ஏஜெண்ட் மூலம் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து துபாய் நாட்டில் அஜ்மன் என்ற பகுதிக்கு கார்பெண்டர் மற்றும் பெயிண்டர் பணிக்கு விசா வாங்கி டீக்ரூட் என்ற நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
இவர் கடந்த 3 மாதமாக வீட்டிற்கு பணம் அனுப்பவில்லை. கடந்த மே 22ம் தேதி மனைவி மற்றும் சகோதரியிடம் போனில் பேசிய அவர் நிறுவனத்தில் சம்பளத்தை மொத்தமாக அடுத்த மாதம் தருவார்கள், அதை அனுப்புகிறேன் என்று தெரிவி்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி அவருடன் துபாயில் அறையில் தங்கியுள்ள சுப்பிரமணி, ராமர் ஆகியோர் சுப்ரமணியனின் உறவினர் பரமசிவன் என்பவருக்கு போன் செய்து சுப்பிரமணியன் இறந்துவிட்டார் என்றும் அவரது உடல் அஜ்மன் மருத்துவமனையில் உள்ளது என்றும் தெரிவித்தனர்.
இறந்து போன சுப்பிரமணியனின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு அவர் பணியாற்றிய நிறுவனம், இந்திய வெளியுறவுத்துறை, துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றிக்கும் பேக்ஸ், டெலிகிராம் அனுப்பினர்.
ஆனால் சுப்பிரமணியன் உடல் வந்து சேரவில்லை. இதையடுத்து பிரதமர், முதல்வர் ஆகியோருக்கும் மனு அனுப்பிவிட்டு உடல் வரும் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டுள்ளனர்.