படுக்கையறை காட்சியை படம் பிடித்ததாக மிரட்டி பணம் பறிப்பு- வாலிபர் கைது
சென்னை: மத்திய அரசு ஊழியர் தனது மனைவியுடன் படுக்கையறையில் இருந்த காட்சிகளை வீடியோவில் படம் பிடித்து வைத்துள்ளதாகக் கூறி, அதை இன்டர்நெட்டில் வெளியிட போவதாக மிரட்டி ரூ.1.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்த சீனிவாசன் (36), அவரது மனைவி சங்கீதா (30) இருவரும் மத்திய அரசுப் பணியி்ல் உள்ளனர்.
கடந்த 14ம் தேதி காலையில் சீனிவாசனின் கேமரா மொபைல் போன் காணாமல் போனது.
இதையடுத்து அந்த மொபைலுக்கு அவர் போன் செய்தபோது அதை வேறொருவன் எடுத்துப் பேசினான். அவன், நேற்று இரவு நான் உங்கள் வீட்டில் திருட வந்தேன். அப்போது நீயும், உன் மனைவியும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்ததை பார்த்தேன். வீட்டில் திருடிய மொபைல் போன் மூலம் அதை படம் பிடித்துவிட்டேன். அதை இன்னும் சிறிது நேரத்தில் இன்டர்நெட்டில் வெளியிட போகிறேன் என்று மிரட்டினேன்.
அதிர்ந்துபோன சீனிவாசன் அவனிடம் கெஞ்சியுள்ளார். இதையடுத்து அவன் ரூ. 1.5 லட்சம் கொடுத்தால் அந்த வீடியோ அடங்கிய செல்போனை தந்து விடுகிறேன். இல்லாவிட்டால் இன்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டினான்.
அப்போது சீனிவாசன் தன்னிடம் அவ்வளவு பணம் இப்போது இல்லை என்று கூறவே இப்போது கையில் இருக்கும் பணத்தை கொண்டு வந்து கொடு என்றான்.
இதையடுத்து தன்னிடம் இருந்த ரூ. 5,000 பணத்துடன் அவன் வரச் சொல்லிய ரெட்டேரி பாலத்திற்கு தனியாகச் சென்றார். அங்கு அவரை சந்தித்த ஒரு நபர் பணத்தை வாங்கிக் கொண்டு மொபைலை திருப்பி கொடுத்துவிட்டு பைக்கில் தப்பிவிட்டான். ஆனால், அந்த செல்போனில் படுக்கையறை வீடியோ ஏதும் இல்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு பின் அவருக்கு மீண்டும் போன் செய்து தான் படுக்கையறை காட்சிகளை சி.டியில் பதிவு செய்து வைத்துள்ளதாதவும், மீதிப் பணத்தை விரைவில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்றும் மிரட்ட ஆரம்பித்தார்.
இதையடுச்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து நடந்த சம்பவங்களை சொன்னார் சீனிவாசன்.
இதையடுத்து களத்தில் குதித்தனர் போலீசார். அவர்கள் சொன்ன திட்டப்பட்டி அவனை மாலை 5 மணிக்கு சி.டியுடன் ரெட்டேரி பாலத்துக்கு வரச் சொன்னார் சீனிவாசன்.
போலீசார் பாலத்தின் இரு புறமும் மறைந்து நிற்க, அந்த ஆசாமி இம்முறை ஆட்டோவில் வந்தான். அவனை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவனிடம் இருந்த சிடியை பறிமுதல் செய்தனர்.
ஆனால், அந்த சி.டியில் எந்த ஆபாச படமும் இல்லை. இதையடுத்து அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,
அவனது பெயர் முரளி (21), கொளத்தூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. அவன் படுக்கையறை படம் எதையும் எடுக்கவில்லை என்றும் சீனிவாசனின் வீட்டுக்குள் இருந்த செல்போனை மட்டுமே திருடிச் சென்றதாகவும் கூறியுள்ளான்.
இப்படி எத்தனை பேரை இவன் மிரட்டி பணம் பறித்துள்ளான் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications