மபி காவல் நிலையத்தில் போலீசாரால் பெண் கற்பழிப்பு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் வைத்து ஒரு பெண்ணை கற்பழித்ததாக 4 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் பீடேல் மாவட்டத்தில் ஜம்பாரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவரை போலீசார் கடந்த 2ம் தேதி மருமகளிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறி கைது செய்தனர்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். ஆனால், போலீசார் அந்த பெண்ணை சிறையில் அடைக்காமல், அம்லா காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அதுவும் மாலை 6 மணிக்கு மேல் சிறையில் தங்க வைத்துள்ளனர்.
மறுநாள் 3ம் தேதி காலை அந்த பெண்ணை சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர். அப்போது அந்த பெண் அம்லா காவல் நிலையத்தில் வைத்து நான்கு போலீசார் தன்னை கற்பழித்ததாக குற்றம்சாட்டினர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அந்த பெண்ணின் புகார் உண்மை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லவில்லை என்றும், அன்று இரவு தாங்கள் யாரும் பணியில் இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவி்த்தனர்.
மேலும், அந்த பெண், மருமகளை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இருந்து தப்பிக்க அந்த பெண் இது போன்ற தவறான குற்றச்சாட்டுக்களை போலீசார் மீது சுமத்தி அனுதாபம் பெற பார்க்கின்றார் என்றனர்.
போலீசார் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அப்பகுதி கூடுதல் டிஐஜி வி.கே.பவார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications