மும்பை தாக்குதல்-விசாரணை கமிஷன் கோரும் அத்வானி
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக தலைவர் அத்வானி கூறினார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர்,
நாட்டின் பாதுகாப்புக்கு ஜனாதிபதி உரையில் முக்கியத்துவம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது. 3 போர்களில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான், இந்தியாவுடன் மறைமுக யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த நவம்பரில் மும்பையில் நடந்த தாக்குதல் சாதாரணமான பயங்கரவாத தாக்குதல் அல்ல. அது இந்தியாவுக்கு எதிரான ஒரு படையெடுப்பு போன்றதாகும்.
இந்தத் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய மகாராஷ்டிர மாநில பிரதான் கமிட்டி, மத்திய அரசின் தோல்வியே தாக்குதலுக்கு காரணம் என்றும், மாநில அரசு தரப்பில் எந்தவித தவறும் இல்லை என்றும் கூறியிருப்பதை ஏற்க முடியவில்லை.
இதனால் மத்திய அரசே ஒரு விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் தடுக்க மத்திய அரசுக்கு அந்தக் கமிட்டி பரிந்துரை வழங்க வேண்டும்.
கடல் மார்க்கமாக தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் எச்சரித்த நிலையில், அதைத் தடுக்கத் தவறியார் யார், எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிவது அவசியம்.
தாக்குதல் சம்பவத்துக்குப்பின் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும், துணை முதல்வர் பட்டீலும் விலகியதால் இந்த விசாரணை அவசியமாகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அவர்கள் இருவரும் தார்மீக பொறுப்பேற்று விலகினார்கள். ஆனால், பாஜக ஆட்சியின்போது யாரும் அப்படி தார்மீகப் பொறுப்பை ஏற்றதும் இல்லை, விலகியதும் இல்லை என்றார்.
இதையடுத்துத் தொடர்ந்து பேசிய அத்வானி, மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உல் தாவா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபிஸ் சயீத்தை சர்வதேச நிர்பந்தம் காரணமாக பாகிஸ்தான் கைது செய்தது. இப்போது போதுமான ஆதாரம் இல்லை என்ற அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்குள் பாகிஸ்தான் மறைந்து கொள்ள முயற்சிக்கிறது. பாகிஸ்தானுக்கு இந்த அரசு கொடுத்துள்ள ஆதாரங்களை மக்களவையில் வெளியிட வேண்டும். அப்போதுதான் எந்த அடிப்படையில் சயீத்துக்கு எதிராக பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்தது என்பதை மக்கள் அறிய முடியும்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது குறித்து நிலைமையை நேரில் கண்டறிவதற்காக நாடாளுமன்றக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அத்வானி.
விசாரணை கமிஷன் தேவையில்லை-ப.சி.:
பின்னர் நிருபர்களிடம் பேசிய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்,
மும்பை தாக்குதல் குறித்து 6 மாதங்களுக்குப்பின் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அத்வானி கோருவது வியப்பாக உள்ளது.
மீண்டும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட மாட்டாது. பாஜக ஆட்சி காலத்தில் கந்தகார் விமான கடத்தல், நாடாளுமன்றம் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தன. அப்போது அத்வானி ஏன் விசாரணை கமிஷன் அமைக்கவில்லை என்று கேட்டார்.