தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு-ராமதாஸ்
சென்னை: தமிழக மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவின் காஞ்சீபுரம் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், சென்னை கூடுவாஞ்சேரியில் நடந்தது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
நடந்து முடிந்த தேர்தலில் பாமக. தோல்வி அடையவில்லை. தோற்கடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். பண பலம், அதிகாரம், சூழ்ச்சி, வஞ்சகம், திட்டமிட்டு செய்யப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரம் ஆகியவையே தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி வாக்கு சாவடியில் ஒரு குறிப்பிட்ட பூத்தில் 100 சதவீத வாக்கு பதிவாகி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
100 சதவீதம் வாக்கு பதிவு ஆகி இருந்தால், மறுவாக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் விதிமுறை உள்ளது. இது போன்ற ஆதாரங்களை வைத்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
ஓட்டுப் பதிவு இயந்திரம் மூலம் எப்படி வேண்டுமானாலும் தவறு செய்ய முடியும். பாமக சார்பில் தேர்தலில் பயன்படுத்தப்படும் எந்திர மாடல் தயார் செய்து, அதனை டெல்லிக்கு கொண்டு சென்று, அங்குள்ள தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில், எப்படி முறைகேடு செய்ய முடியும் என்று விளக்கிக் காட்ட முடியும்.
தேர்தலில் தோல்வி என்பது நிரந்தரமல்ல. கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது இந்திராகாந்தி, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். எனவே யாரும் தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது. அடுத்த தேர்தலில் மிக பெரிய வெற்றி பெற இதை ஊக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், இளைஞர்கள், பெண்கள் உள்பட 50,000 உறுப்பினர்களை பாமகவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். இதற்காக ஒன்றியத்துக்கு 60 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். ஒரு குழுவில் 3 பேர் இருப்பார்கள். ஒன்றிய, நகர செயலாளர்களின் செயல்பாடுகள் சரியில்லாததே கட்சி பலவீனம் அடைந்ததற்கு காரணம். எனவே விரைவில் ஒன்றிய, நகர செயலாளர்கள் தேர்தல் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications