2 தலிபான் தலைவர்கள் சுட்டுக் கொலை - பாக். ராணுவம்
இஸ்லாமாபாத்: தலிபான் அமைப்பின் தீவிர ஆதரவு தலைவர்கள் இருவரை சுட்டுக் கொன்று விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்று வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் 2 தலிபான் ஆதரவு தலைவர்களை சுட்டு வீழ்த்தி விட்டதாக ராணுவம் கூறியுள்ளது.
பெஷாவரில் உள்ள ஒரு சிறைக்கு, கைது செய்யப்பட்ட தலிபான் தீவிரவாதிகளை கொண்டு சென்றபோது அந்த வாகனத்தை தீவிரவாதிகள் தாக்க முயன்றனர். அப்போது நடந்த சண்டையில் 2 தலிபான் தலைவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட நபர்கள் டெஹ்ரிக் இ நிபாஸ் இ ஷரியா முகம்மதி என்ற தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவரான மெளலானா முகம்மது ஆலம் மற்றும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அமீர் இஸாத் ஆகியோர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சண்டையில் ஐந்து வீரர்கள் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இருவருமே சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள். இன்று அவர்களை சிறையில் அடைக்க கொண்டு சென்றபோது தீவிரவாதிகள் அவர்களை மீட்க முயன்றனர். அப்போது நடந்த சண்டையின்போது வேனுக்குள் இருந்த இருவரையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்று விட்டனர்.