தமிழர் கிராமத்தில் கட்டப்பட்ட புத்த கோவிலுக்குப் போன ராஜபக்சே மனைவி
யாழ்ப்பாணம்: தமிழர் கிராமம் ஒன்றில் புத்தர் கோவில் கட்டப்படவுள்ளது. அந்த கோவிலுக்கு அதிபர் ராஜபக்சேவின் மனைவி தனது மகன் வந்து சென்றார்.
தமிழர் பூமியான யாழ்ப்பாணம், மாதகல் என்ற கிராமம் முற்றிலும் தமிழர்களின் கிராமம் ஆகும். இங்கு இப்போது ஒரு புத்தர் கோவிலை கட்டியுள்ளனர். இந்த இடத்தில்தான் அசோகரின் மகளும், முதல் புத்த பெண் துறவியுமான சங்கமித்தா வந்து இறங்கியதாக சிங்களர்கள் கூறுகிறார்கள்.
இங்கு ஒரு புத்த கோவிலை தற்போது சிங்கள நிர்வாகம் நிர்மானித்துள்ளது. இந்த கோவிலில் சங்கமித்தாவின் சிலையை வைக்கவுள்ளனர்.
இந்த சிலையுடன் அதிபர் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே, மகன் நமல் ராஜபக்சே ஆகியோர் தனி விமானம் மூலம் வந்தனர்.
பலாலி ராணுவ விமான தளத்திற்கு விமானத்தில் வந்திறங்கிய அவர்கள் பலத்த பாதுகாப்புடன் மாதக்கல் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு புத்த கோவிலில் சிலையை வைத்து ராஜபக்சே மனைவியும் பிறரும் வணங்கினர். மேலும், ஏழு சிங்கள மாணவிகளை கடற்படை வீரர்கள் அங்கு அழைத்து வந்தனர். அந்த சிறுமியர் இலங்கை தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவத்தால் தேர்வு செய்யப்பட்ட 250 தமிழ் அகதிகளும் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களிடம் ஷிராந்தி பேசினார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் பலாலி சென்று தலைநகர் கொழும்புக்கு ராஜபக்சே மனைவியும், மகனும் திரும்பிச் சென்றனர்.
தமிழர்களின் பூமியை சிங்கள மயமாக்க இலங்கை அரசு முயல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. அதை நிரூபிப்பது போல இப்போது யாழ்ப்பாணத்திற்குள் வந்து புத்த கோவிலை கட்டி, அங்கு சங்கமித்தாவின் சிலையையும் வைத்து விட்டுச் சென்றுள்ளார் ராஜபக்சே மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.