மதுரை - தூத்துக்குடி இடையே ரசாயனத் தொழிற்சாலை அமைக்கப்படும்: அழகிரி
மதுரை: மதுரை, தூத்துக்குடி இடையே புதிய ரசாயனத் தொழிற்சாலை உருவாக்கப்படும். இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அழகிரி நேற்று மதுரை வந்தார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை-தூத்துக்குடி இடையே ரசாயனத் தொழிற்சாலை தொடங்கப்படும். இதற்காக வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தென் மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்றிட யாராலும் முடியாது. வரும் 5 ஆண்டுகள் மத்திய அரசு நிலைத்து இருக்கும். அதனால் படிப்படியாக என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த முடியுமோ, அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். ஏற்கெனவே கூறியது போல, விவசாயிகளுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருந்துகளின் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடக்க விழா விரைவில் நடைபெறும். மேலும் ரூ.291 கோடியில் மேலூர் பகுதிகளில் காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும். விடுபட்ட ஊர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றார் அழகிரி.