தற்கொலை-மாணவியின் உடல் 5 மாதங்களுக்கு பின் தோண்டி எடுப்பு
குற்றாலம்: குற்றாலம் அருகே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவி கற்பழிக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து ஐந்து மாதங்கள் கழிந்த நிலையில் அவரது உடல் தோண்டி எடுக்குப்பட்டது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தை அடுத்த நன்னகரம் ஏசிஏ சர்ச் தெருவை சேர்ந்தவர் மதிப்புராஜ். கொத்தனராக வேலை பார்க்கிறார். இவரது மகள் விமலா. மேலகரம் பள்ளியில் பிளஸ்டூ படித்து வந்தார்.
இந்நிலையில் விமலா கடந்த ஜனவரி 6ம் தேதி அன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி மாணவியின் தந்தை மதிப்புராஜ் குற்றாலம் போலீசில், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு சில மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கிறிஸ்தவ பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் செய்தார்.
இதையடுத்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் சங்கரன்கோவில் தாசில்தார் அப்துல் சலாம், வீரசிகாமணி வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சேர்ந்தமரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், ஆகியோர் முன்னிலையில் வடநத்தம்பட்டியில் மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.