5ம் ஈழப் போரை விரைவில் பிரபாகரன் அறிவிப்பார்: நெடுமாறன்
தமிழீழமும் நமது இன்றைய கடமையும் என்பது குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவரது சொந்த மண்ணில் நலமுடன் உள்ளார். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அவர் அறிவிப்பார்.
இலங்கை ராணுவ முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் மின்சார வேலி அமைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மருந்துகள் கிடையாது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் திரும்புவது கிடையாது. இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும்.
ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், சர்வதேச பத்திரிகையாளர்கள் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்துள்ளனர். அண்டை நாடான இந்தியா வாய் திறக்கவில்லை. ஏன் இலங்கைத் தலைமை நீதிபதியே கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இருக்கும் உணர்வுகூட இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இல்லை என்றார் நெடுமாறன்.