அழகர்கோவிலில் கொள்ளை முயற்சி-போலீஸ் விசாரணை
மதுரை: அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் கோவிலுக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று நகைகளை கொள்ளையடிக்க முயன்றது. ஆனால் காவலாளி வந்ததை அடுத்து அவர்கள் நகைகளை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் அழகர்கோவிலும் ஒன்று. கள்ளழகர் திருக்கோவில் இடம்பெற்றுள்ளதால் அழகர்கோவில் என்று அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.
இவர்கள் வெள்ளி, தங்க நகைகளையும், பணங்களையும் காணிக்கையாக அளிக்கின்றனர். இந்த காணிக்கைகள் மாதம் ஒரு முறை எண்ணப்படுகிறது. தங்க நகைகள் கோயிலில் இருக்கும் லாக்கர் ஒன்றிலும், வெள்ளி பொருட்கள் மூலஸ்தானத்துக்கு அருகில் உள்ள ஒரு அறையில் இருக்கும் சூட்கேசிலும் வைக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்து கொண்ட மர்ம கும்பல் ஒன்று இன்று அதிகாலை 3 மணிக்கு கோவிலுக்குள் புகுந்து நகைகளை திருட முயன்றது. லாக்கரை உடைக்க முடியாமல் போகவே அங்கிருந்த வெள்ளி பொருட்களை வாரியிறைத்து கொண்டு கிளம்பியது.
அப்போது அங்க வந்த காவலாளி பாஸ்கர் கொள்ளையர்களை கண்டதும் அவர்களை பிடிக்க ஓடினர். காவலாளியை கண்ட கொள்ளையர்கள் நகைகளை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து காவலாளி பாஸ்கரன் ஊமச்சிகுளம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மோப்ப நாய், கைரேகை நிபுணர் சகிதம் வந்து துப்பு துலக்கி வருகின்றனர்.
சமீபத்தில்தான் சென்னையில் உள்ள ஜெயின் கோவிலில் வாட்ச்மேனைக் கொன்று தங்க அங்கி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிலையில் அழகர்கோவிலில் நடந்துள்ள இந்த துணிகர திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications