சென்னையில் வாலிபர் கொடூரமாக வெட்டிக் கொலை
சென்னை: சென்னையில் வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது.
சென்னை சூளையில் உள்ள நடராஜா தியேட்டர் அருகில் இருக்கும் சட்டண்ணன் தெருவில் இன்று அதிகாலை, ஒரு பாலிதீன் பையில் துண்டிக்கப்பட்ட 2 கைகள் தனியாக கிடந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்தப் பையை மீட்டனர்.
அதில் இரு கைகள் மட்டும் கிடந்தன இடது கையில், செம்பினால் ஆன மோதிரம் உள்ளது. வலது கையில் சிவப்பு நிற கயிறு கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யானைகவுனி போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. போனில் பேசிய ஒருவர், காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள வெங்கட்ராமன் தெருவில் ஒரு பார்சல் கிடப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அந்த பார்சலைக் கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில்,
இடுப்புக்கு கீழ் துண்டிக்கப்பட்ட ஒரு ஜோடி கால்கள் மட்டும் மடக்கிய நிலையில் இருந்தது.
ஏற்கனவே சிக்கிய கைகளுக்குரிய நபரின் கால்கள்தான் இவை என்று போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இந்த நிலையில், என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் கிருஷ்ணப்பா மேஸ்திரி தெருவில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் அருகில் ஒரு சணல் பை அனாதையாக கிடப்பதாக தகவல் வந்தது.
போலீஸார் அந்த பையை மீட்டுப் பார்த்தபோது தலையில்லாத ஒரு உடல் மட்டும் கிடந்தது. இடுப்புக்கு மேல் உள்ள பகுதி அது.
இந்த மூன்று பாகங்களுமே ஒரே நபரின் உடலுக்குரியவை என்று தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்டவர் இளைஞர் என்று தெரிகிறது.
தலையை போலீஸார் தேடி வருகின்றனர். கொடூரமாக கொல்லப்பட்ட இந்த நபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.