எல்டிடிஇ தடையை நீக்குங்கள்: ஒபாமாவுக்கு தமிழர்கள் கோரிக்கை
வாஷிங்டன்: விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது செயலிழந்து விட்டது. அந்த அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசே கூறி விட்டது. எனவே, அமெரிக்காவும் ஏனைய மேற்குலக அரசுகளும் விடுதலைப் புலிகளை தமது பயங்கரவாதப் பட்டியல்களில் இருந்து நீக்க வேண்டும் என 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், அதிபர் ஒபாமா மற்றும் காங்கிரஸ், செனட் சபை உறுப்பினர்களுக்கு இதுதொடர்பாக அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவை என்ற பெயரில் - தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற மக்களுக்கு உதவி செய்யும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கூட சில நாடுகளில் பயங்கரவாதப் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், போரினால் பாதிப்படைந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவி செய்ய கூட முடியாமல் இருக்கின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது செயலற்று போய் விட்டதால், அவர்களுடன் தொடர்புடையவை என கூறப்பட்ட இவ்வாறான தொண்டு நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டு போரினால் பாதிப்படைந்துள்ள மக்களுக்குச் சுதந்திரமாகத் தொண்டாற்ற அவை அனுமதிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 'ஒபாமாவிற்கான தமிழர்கள்' அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதும், தமிழ் தொண்டு நிறுவனங்களின் மீதும் அமெரிக்காவில் உள்ள தடை நீக்கப்படும் போது - ஏனைய நாடுகளும் அதனைப் பின்பற்றி செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications