சென்னை மின்சார ரயிலுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததை அடு்தது போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். இறுதியில் அவர் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணிக்கு மின்சார ரயில் ஒன்று திருவள்ளூர் நோக்கி கிளம்பியது. ரயிலை குமரேசன் என்ற டிரைவர் ஓட்டினார். துளசிதாஸ் என்ற கார்டு பணியில் இருந்தார்.
ரயில் அம்பத்தூரை தாண்டிய நிலையில் கார்டு துளசிதாசுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். அதில் மின்சார ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடித்துவிடும் என்றும் கூறினார்.
கார்டு, டிரைவருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார். இதையடுத்து வண்டி ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. நிலைய அதிகாரி, ரயில்வே போலீஸ் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் மற்றொரு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த மாதத்தில் மின்சார ரயிலை தீவிரவாதி ஒருவன் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, சமீபத்தில் உளவுத்துறை தென் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்தது போன்றவற்றால் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
ரயில் முழுவதையும் சல்லடை போட்டு தேடியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. சுமார் மூன்று மணி நேர சோதனைக்கு பின்னர் அதிகாலை 2.40 மணிக்கு அது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.