கருணாநிதி-ப.சி பேசியது என்ன?-ஜெ. புதிய தகவல்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப இலங்கையில் போர் நின்று விட்டாலும் அப்பாவி தமிழர்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இலங்கை முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த அப்பாவி தமிழ் மக்கள் கடும் துன்பங்களையும், வேதனைகளையும் வார்த்தைகளால் விளக்க முடியாது என்று அந்தப் பகுதிகளை நேரில் பார்த்த இலங்கை தலைமை நீதிபதி கவலையுடன் தெரிவித்துள்ளார். உணவு பொருட்களை பெறுவதற்கும், கழிவறைகளுக்கு செல்வதற்கும் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய அவலநிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும், இவ்வாறு வெளிப்படையாக சொல்வதால் தான் தண்டிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 1-வது கூட்டத்தொடரில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகார ஆணையர், இலங்கையில் தமிழர்கள் பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதற்கு பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பிரச்சனை ஐ.நா. சபையில் ஏற்கப்படவில்லை. இது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.
தமிழின தலைவர் என்று தன்னைத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் கருணாநிதிக்கு தமிழர்களை பற்றிய கவலை அறவே கிடையாது. தன் மக்களுக்காக வளமான இலாகாக்களை போராடி பெறும் அளவுக்கு தமிழ் மக்களுக்காக போராடும் மனம் கருணாநிதிக்கு கிடையாது.
இதனால் தன் மக்களின் வளமான வாழ்க்கைக்கு பங்கம் வந்து விடுமோ என்ற ஐயம்தான் இதற்கு காரணமாகும். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து இலங்கையில் அதிகார பகிர்வு குறித்து பேசியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
ஆனால் இளையாங்குடி தொகுதி இடைத் தேர்தலில் தன் மகனை வேட்பாளராக நிறுத்துவது குறித்து முதலமைச்சரிடம் சிதம்பரம் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக 'தன் மக்கள்' உணர்வு தான் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. எனவே இடம் பெயர்ந்து முகாம்களில் வாழும் அப்பாவி இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தரவும், சிங்கள மொழி பேசும் மக்களுக்கு இணையாக தமிழ் மக்கள் வாழவும், முகாம்களில் வாழும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications