சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதிகாரிகளுக்கு கருணாநிதி உத்தரவு
முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் நேற்று மாலை அவசர கூட்டம் கூட்டபப்ட்டது. மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து இதில் ஆய்வு நடத்தப்பட்டது.
தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உள்துறை முதன்மை செயலாளர் எஸ்.மாலதி, டி.ஜி.பி. கே.பி.ஜெயின், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அனுப் ஜெயிஸ்வால், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம், உளவுப்பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான குற்றங்கள் பற்றிய விவரங்களையும், அவை தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பல்வேறு போலீஸ் பிரிவுகளில் கையாளப்படும் முக்கிய வழக்குகள் பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தார்.
தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அண்மையில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை தகவல் அனுப்பியது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விவரமாக கேட்டார்.
மேலும் பல்வேறு பிரச்சினைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு உரிய ஆணை முதல்வரால் பிறப்பிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் இந்த கூட்டத்தில் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.