தமிழக மணலை 'சுரண்டும்' கேரளம்!
கேரள ஆற்றுப் படுகைகளில் மணல் எடுப்பதற்கு அம் மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும், அந்த மாநில வருவாய்த் துறை, காவல்துறையினர் மணல் அள்ளுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால் கேரள ஆற்றுப் படுகையில் இருந்து மணல் அள்ளுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் தங்களுக்குத் தேவையான மணலை தமிழக ஆற்றுப் படுகைகளில் இருந்து திருட்டுத்தனமாக அள்ளி வரும் லாரிகளிடம் இருந்து வாங்குகிறது கேரளா.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இருந்தும், கோவையில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுமதியின்றி கேரளாவுக்கு மணல் கடத்தல் நடந்து வருகிறது.
மேலும் கரூர், திருச்சி, வேலூர், தருமபுரி என தொலைதூரப் பகுதிகளில் இருந்து மணல் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
கேரளத்தில் மணல் அள்ளுவதைத் தடுக்கும் அம்மாநில அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்படும் மணல் லாரிகளைத் தடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைவிட கேரளாவில்தான் அதிக ஆற்றுப் படுகைகள் உண்டு. ஆனால், அவர்கள் தங்கள் மாநில விவசாயத்தை பாதுகாக்கும் நோக்கில் ஆற்றில் மணல் எடுக்க தடை விதித்துள்ளனர்.
தமிழர்கள் ஏமாந்தவர்கள் என்பதால் நம்மவர்களே நமது வளத்தை சுரண்டு கேரளாவில் விற்று வருகின்றனர்.