ஈழப் பிரச்சினையில் தலையிட சுவிஸ் சான்சலருக்கு கோரிக்கை
பெர்ன்: ஈழப் பிரச்சினையில் தலையிட்டு, அங்கு மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சுவிட்சர்லாந்து நாட்டு சான்சலர் கொரினா கேசனோவாவுக்கு தமிழர்கள் கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக 20,000 பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மனு ஒன்று சான்சலர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கான சுவிஸ் ஆதரவு என்ற அமைப்பு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதில், சுவிட்சர்லாந்து அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பன்னாட்டு நிவாரணக் குழுக்கள், மனிதாபிமானக் குழுக்கள் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க அனுமதி அளிக்குமாறு இலங்கையை வற்புறுத்த வேண்டும்.
இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களுக்கு செல்ல இவர்களை அனுமதிக்குமாறு இலங்கையை வற்புறுத்த வேண்டும்.
சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் அப்பாவி மக்கள் நடத்தப்படுவதை சுவிட்சர்லாந்து உறுதி செய்ய வேண்டும்.
நாட்டின் சிறுபான்மை மக்கள் கெளரவத்துடனும், மரியாதையுடனும் வாழ இலங்கை அரசு வழி செய்ய வேண்டும் என அந்த நாட்டை சுவிட்சர்லாந்து வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.