சென்னை-திருந்செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரியாகிறது!
சென்னை: திருச்செந்தூர்-சென்னைக்கு இடையே தற்போது வாரம் ஒரு முறை இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரசை தினசரி இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என ரயில்வே துறை இணை அமைச்சர் அகமது தெரிதிவித்துள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரை, ரயில்வை துறை அமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து வாரம் ஒரு முறை ஓடும் திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரசை தினசரியாக மாற்றும்படி கோரிக்கை விடுத்தார். அவரும் அதை பரிசீலிப்பதாக சொன்னார்.
இந்நிலையில் எழும்பூரில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தை துவக்கி வைத்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னை, வியாசர்பாடியில் நடந்த ரயில் விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து தற்போது சென்ட்ரல் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மின்சார ரயில்களுக்கான சாவி டிரைவர்களிடம் நேரடியாக கொடு்க்கப்படுகிறது. விபத்து நடந்த சமயத்தில் ரயில்வே மேலாளர்களாக இருந்தவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர்.
டிரைவர்களின் கைரேகைகளை என்ஜினில் பதிவு செய்து ரயில்களை இயக்கும் நவீன தொழில்நுட்ப முறையை கொண்டு வர ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரூ. 5 கோடி மதிப்பில் சுழலும் கேமிராக்கள் மூர் மார்க்கெட் புறநகர் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ரயிலை யார் இயக்குகிறார்கள் என்ற விவரங்களை கேமிரா மூலம் தெரிந்து கொள்ளலாம். ரூ. 55 கோடி செலவில் புறநகர் ரயில் நிலையங்களை ஒருங்கிணைக்கும் வகையில் கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன.
திருச்செந்தூர்-சென்னை ரயிலை தினமும் இயக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். ரயில்களில் புதிதாக போடப்பட்ட பக்கவாட்டு படுக்கைகள் செப்டம்பர் 13ம் தேதிக்குள் அகற்றப்படும். ரயில் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக போலீசார் மீது அதிக புகார்கள் வருகின்றன. தவறு செய்யும் போலீசார் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
மதுரை-திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை பணி முடிந்தது...
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் கூறுகையில்,
விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகலப்பாதை அமைக்கும் பணி மூன்று மாதத்தில் முடிவடைந்து விடும். மதுரை-திண்டுக்கல் இடையே இரண்டாவது அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிந்து விட்டது. பாதுகாப்பு அதிகாரி ஆய்வுக்காக காத்திருக்கிறது.
செங்கல்பட்டு- விழுப்புரம் இடையே 2-வது அகலப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் அது நிறைவடையும். சென்னை- திருச்சி அகலப்பாதை மின் மயமாக்குதல் பணி 3 மாதங்களில் முடிந்து விடும் என்றார்.
ஸ்மார்ட் கார்டு அறிமுகம்...
மேலும், ரயில் நிலையங்களில் நிற்கும் நீண்ட வரிசையில் நிற்காமல் புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்களின் வசதிக்காக உடனடியாக டிக்கெட் பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் ரூ. 100 மதிப்பிலான கார்டில் ரூ. 70 வரை டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். 24 மணி நேரமும் டிக்கெட் பெறக்கூடிய இந்த வசதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ளது.