இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்
வங்கி ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1993ல் எம். கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கித் தலைவராக இருந்தபோது, மும்பையைச் சேர்ந்த பிஜே என்ற பைப் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 8.86 கோடியை மும்பை கிளை மூலம் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையை வழங்குவதற்கு அவர் எந்த ஆவணமும் வழங்கவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து சிபிஐ, கோபாலகிருஷ்ணன் மற்றும் அப்போதைய மும்பை கிளையின் மேலாளர் சண்முகசுந்தரம் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரங்கராஜன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி, கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.70 லட்சம் அபராதமும் விதித்தார். சண்முகசுந்தரத்துக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.80 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில்,
இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. கோபாலகிருஷ்ணன் ரூ.2 லட்சத்தையும், சண்முகசுந்தரம் ரூ.2.25 லட்சத்தையும் சிபிஐ நீதிமன்றத்தில் வைப்பு தொகையாக வைக்க வேண்டும்.
மேலும் அவர்கள் இருவரும் தலா ரூ.1 லட்சம் கொடுத்து சொந்த ஜாமீன் பெறலாம். ஜாமீனில் வெளிவந்த பிறகு சம்பந்தப்பட்ட சிபிஐ நீதிமன்றத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று ஆஜராக வேண்டும். முகவரி மாற்றம் செய்தால் அதனை உடனடியாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார்.