சென்னையில் சுவர் விளம்பரங்களுக்கு தடை அமல்
சென்னை: சென்னை நகரில் சுவர் விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் விளம்பரங்களை அழிக்கும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த மே 28ம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்தில், சென்னையை போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு முதல் கட்டமாக அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் சுவர் விளம்பரம் மற்றும் போஸ்டர் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்படும் என மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும், அவர் இந்த தடை வரும் ஜூன் மாதம் 10ந் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்தார். இதையடுத்து இன்று 10ம் தேதி பெரியார் சிலை அருகே விளம்பரங்கள் அழிக்கப்படுவதை அவர் நேரில் சென்று பார்வையி்ட்டார்.
பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,
துணை முதல்வர் ஸ்டாலினின் அறிவுரையின் பேரில் சென்னை நகரை அழகுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி செய்து வருகிறது. கடந்த மாதம் எடுக்கப்பட்ட முடிவின் படி தற்போது காமராஜ் சாலை, அண்ணா சாலையில் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
காமராஜ் சாலையில் நேப்பியர் பாலம் முதல் அம்பேத்கார் மணி மண்டபம் வரையும் அண்ணா சாலையில் தீவுத்திடலில் இருந்து தீரன் சின்னமலை சிலை வரையும் போஸ்டர் மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுவதிலும், சுவர் விளம்பரங்களை அழிப்பதிலும் 50 உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் 500 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் விளம்பரங்கள் அழிக்கப்படும்.
நாளை முதல் புதிய விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் அங்கு ஒட்டப்படும். மீறுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிறுத்தங்கள், நடைபாதையில் இருக்கும் விளம்பரங்கள் அகற்றப்படும் என்றார் மேயர் சுப்ரமணியன்.












Click it and Unblock the Notifications