தூத்துக்குடி: திமுக எம்பி பேனர் கிழிப்பு-ஒருவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் வைக்கப்பட்டிருந்து திமுக எம்.பி. ஜெயதுரையின் பேனர் கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயதுரை. நாடாளுமன்ற கூட்ட தொடரில் கலந்து கொண்ட அவர் நேற்று விமானம் முலம் தூத்துக்குடிக்கு வந்தார். இதையடுத்து நகர் முழுவதும் அவரை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மூன்றாம் மைல், மையவாடி சந்திப்பு உள்பட 5 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் திமுக எம்.பி. ஜெயதுரையின் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் எம்பியின் ஆதரவாளர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஏரல் அருகே உள்ள மங்கலக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஆபிரகாம் குருஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த இரண்டு நபர்கள் போலீசை பார்த்ததும் பைக்கில் தப்பிக்க முயன்றனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொருவன் ஓடிவிட்டான். விசாரணையில் பிடிபட்டவன் தாமோதரன் நகரை சேர்ந்த சவுந்திரபாண்டி மகன் பாலமுருகன் என்ற பால்ராஜ் என்பது தெரியவந்தது.
அவருடன் வந்த ராஜுவ் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 இடங்களில் சேதப்படுத்தப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.