இந்திய மாணவர்களுக்கு ஆஸி. பிரதமர் எச்சரிக்கை
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். இனவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார். சிலருக்கு கத்தி குத்து விழுந்தது. 10க்கம் மேற்பட்டோர் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி தங்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்த வந்த சில ஆஸ்திரேலியர் ஒருவரை இந்திய மாணவர்கள் அடித்து காயப்படுத்தினர். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக சிட்னி போலீசார் இரண்டு இந்திய மாணவர்களை கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மீது ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் கூறுகையில்,
ஆஸ்திரேலியாவில் எந்தவொரு பகுதியில் எந்தவொரு இனத்தை சேர்ந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வன்முறை சம்பவங்களால் நகர வாழ்க்கையே மோசமாகி விட்டது.
அதே சமயத்தில் பதில் தாக்குதல் நடத்துவதும் அதற்கு சமமான குற்றம் தான். சட்டத்தை தங்கள் கைகளிலேயே எடுத்துக்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் நன்றாக யோசித்து முடிவு செய்து, கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் கெவின் ருத்.












Click it and Unblock the Notifications