ஏழுமலையானுக்கு ரூ. 45 கோடி வைர கிரீடம்-கர்நாடகா அமைச்சர் வழங்கினார்
சுரங்க தொழிலதிபரான கலி ஜனார்த்தன ரெட்டி கர்நாடக மாநிலத்தில் சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறார். நேற்று முன்தினம் அவர் குடும்பத்தோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் ரூ. 45 கோடி மதிப்பு கொண்ட வைர கிரீடத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொடுத்தார்.
திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி வைர கிரீடத்தை பெற்றுக்கொண்டார். இதில் 4 ஆயிரம் காரட் எடை கொண்ட 70 ஆயிரம் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. சுமார் 32 கிகி., எடை கொண்ட சுத்தமான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 2.5 அடி எடை கொண்ட இந்த வைரத்தின் நடுப்பகுதியில் சுமார் 890 காரட் எடைகொண்ட ஆப்ரிக்காவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மரகதம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 10 கோடியாகும்.
இந்த கிரீடம் இன்று காலை நடந்த அபிஷேகத்துக்கு பின்னர் ஏழுமலையானுக்கு சூடப்பட்டது. முன்னதாக இந்த கிரீடத்துக்கு திருமலையில் வைபோவவத்சவ மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்த கிரீடத்தை கோயம்புத்தூர் கீர்த்திலால் ஜூவல்லர்ஸ் நிறுவனம் 9 மாதத்தில் வடிவமைத்து கொடுத்துள்ளது. 16வது நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்கள் கொடுத்த காணிக்கைகளுக்கு பின்னர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய காணிக்கை இது தான்.