நிதியுதவி கேட்டு யாரையும் கெஞ்ச மாட்டோம் - இலங்கை
கொழும்பு: சர்வதேச நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டாலர் கடனுவதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற பதட்டத்தில் இருக்கும் இலங்கை, யாரிடமும் நிதி கேட்டு பிச்சை எடுக்க மாட்டோம் என கூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நிவர்ட் கப்ரால் கூறுகையில், பிச்சைப் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு எந்த நாட்டிடமும், எந்த நிதியத்திடமும் போய் பணம் கொடுங்கள் என நாங்கள் கெஞ்ச மாட்டோம்.
சொந்தக் காலில் நிற்கும் தகுதி எங்களுக்கு உண்டு. பங்குச் சந்தைகள் மூலம் பணம் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் எங்களிடம் அதிகமாகவே உள்ளன என்று கூறியுள்ளார் அவர்.
இலங்கை நிதி நிலைமை மகா மோசமாக உள்ளது. அந்த நாட்டின் வெளிநாட்டு நிதியிருப்பு படு வேகமாக குறைந்து விட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம், சர்வதேச நிதியத்திடம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தது இலங்கை.
ஆனால் போர் நடந்து வந்த சூழலில் இவ்வளவு பெரிய நிதியை அளிப்பது சரியாக இருக்காது என அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் பிரேக் போட்டு விட்டதால் சர்வதேச நிதியம் நிதி வழங்குவதை நிறுத்தி வைத்து விட்டது.
தற்போது அப்பாவி மக்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் மனிதாபிமான மீறல்கள், இனப்படுகொலை, போர்க்குற்றம் உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளதாக இலங்கை மீது கடும் குற்றச்சாட்டுக்கள் சரமாரியாக வந்து கொண்டுள்ள நிலையில் சர்வதேச நிதியத்தின் நிதி கிடைக்குமா, கிடைக்காதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
சர்வதேச நிதியத்தில் முக்கிய பங்குதாரராக இருக்கும் நாடு அமெரிக்கா. இலங்கைக்கு நிதி அளிக்க வேண்டுமானால் அமெரிக்காவின் சம்மதம் மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கடும் கோபமாக உள்ளது இலங்கை. நிதியுதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக கப்ரால் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், சர்வதேச நிதியத்தின் நிதியுதவி எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இலங்கையின் வடக்கில் இடம் பெயர்ந்து வந்துள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தேவையானதை செய்ய எங்களிடம் போதுமான நிதி உள்ளது. மேலும் பல தரப்பிடமிருந்து நிதி வந்து கொண்டுள்ளது. எனவே பிரச்சினை இல்லை.
உண்மையைச் சொல்வதாக இருந்தால் சர்வதேச நிதியத்தின் நிதியுதவி கண்டிப்பாக தேவை என்ற கட்டாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. எங்களுக்கு அந்த நிதியுதவி தேவையில்லை என்று நான் கூற மாட்டேன். அதேசமயம், யாரிடமும் போய் நாங்கள் பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் என்றார் கப்ரால்.
இலங்கைக்காக நிதி திரட்டித் தருவோம்: ஜப்பான்
இதற்கிடையே, போரால் ஏற்பட்ட அமளிகள் அடங்கி, நிலைமை இயல்பாக திரும்பிய பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இலங்கையை கட்டமைக்க சர்வதேச அளவில் நிதி திரட்டித் தரப்படும் என ஜப்பான் அமைதித் தூதர் யுஷுஷி அகாஷி கூறியுள்ளார்.
கொழும்பு வந்த அகாஷி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையின் போர் நிலைமை விரைவில் ஆய்வு செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அப்போது வசதி படைத்த நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரும்.
ஆனால் அதற்குள் நம்பகத்தன்மை வாய்ந்த நாடாக இலங்கை மாறி விட வேண்டும்.
இலங்கையின் வட கிழக்குப் பகுதியை புனரமைக்க சர்வதேச அளவில் ஜப்பான் நிதி திரட்டித் தரும்.
ஏற்கனவே ஜப்பான், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை இணைந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications