பஞ்சாபி வாயை பதம்பார்த்த 'பிளேடு' வடை
சென்னை: சென்னை ஹோட்டல் ஒன்றில் வடையிலிருந்த பிளேடு அதை சாப்பிட்ட பஞ்சாபி ஒருவரின் வாயை பதம்பார்த்தது. ரத்தம் சொட்ட அந்த பஞ்சாபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தென் இந்திய உணவு வகைகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுவும் மல்லிகைப்பூ இட்லியும், வடையும் என்றால் போதும் வட இந்தியர்களுக்கு வயிறு பசிக்க துவங்கிவிடும்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வினய் குமார் (66) என்பவர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவுக்கு வந்திருந்தார். கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளை சுற்றி பார்த்தவர். பஞ்சாபுக்கு திரும்பும் வழியில் நேற்று காலை சென்னைக்கு ரயிலில் வந்திறங்கினார்.
வால்டாக்ஸ் ரோட்டில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்றில் இட்லி, வடை ஆர்டர் செய்து சாப்பிட துவங்கினார். அப்போது திடீரென்று அவரது வாயிலில் இருந்து ரத்தம் சொட்ட துவங்கியது. அவரும் வலியால் துடிக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் அவரது பற்கள் இடையே சிறிய பிளேடு துண்டு சிக்கியிருப்பதை கண்டுபிடித்து, வெளியி்ல் எடுத்தனர். இதையடுத்து அந்த பஞ்சாப்காரர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில், ஹோட்டல் மீது புகார் செய்தார்.
இது குறித்து வினய்குமார் கூறுகையில், தமிழ்நாட்டு உணவு வகைகள் நன்றாக இருக்கும் என இங்கு வந்த பஞ்சாபியர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர். அதனால் சென்னையில் இட்லி, வடை சாப்பிட்டு போக வேண்டும் என்ற ஆசையில் வந்தேன்.
இட்லியை ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தேன். வடையை எடுத்து வாயில் வைத்தபோது அதில் இருந்தே பிளைடு வாயை கிழித்துவிட்டது என்றார் அவர்.