அயலக தொழிலாளர் நல அமைப்பு துவக்கம்!
மதுரை: மலேசியாவில் வேலை பார்ப்போரின் துயரங்களைத் தீர்ப்பதற்காக அயலக தொழிலாளர் நல அமைப்பு என்ற ஒன்று மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் கூட்டத்தி்ல ஏராளமானோர் கலந்து கொண்டு தாங்கள் வெளிநாடுளில் பட்ட கஷ்டங்களையும், தங்களது குடும்பத்தினர் பட்ட, பட்டு வரும் துயரங்களையும் கண்ணீருடன் விளக்கினர்.
இவர்களில் பலரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அனிதாகுமாரி என்பவரின் கணவர் ரவி கடந்த 2006ம் ஆண்டு ஏஜென்டு மூலம் மலேசியா போனார். ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்திருக்கிறது.
இந்த நிலையில் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு மனைவியைத் தொடர்பு கொண்டு பேசிய அவர், தன்னை சித்திரவதை செய்கிறார்கள் என்று கூறி கதறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லையாம்.
கணவரை மீட்க கோரி மத்திய அமைச்சர் வயலார் ரவி உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். ஒரு மகள், மகனுடன் கண்ணீரும் கம்பலையுமாக கணவரை நினைத்து வேதனையில் மூழ்கியிருக்கிறார் அனிதா குமாரி.
கொய்யாவை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர்...
திருவாரூர் மாவட்டம் சிறுபுலியூரைச் சேர்ந்த வினோத்தின் கதை கொடுமையானது. போலி பாஸ்போர்ட் மூலம் இவரை ஏஜென்ட் ஒருவர் மலேசியாவுக்கு அனுப்பி விட்டார்.
அங்கு போனதும்தான் தான் போலி பாஸ்போர்ட்டில் வந்தது தெரிய வந்திருக்கிறது வினோத்துக்கு. சாப்பாடு கூட தராமல் கொடுமைப்படுத்தி வைத்துள்ளனர்.
மலைப் பகுதியில் கிடைத்த கொய்யாப் பழங்களைப் பறித்து அதை சாப்பிட்டு ஜீவனம் நடத்தி வந்துள்ளார் வினோத்.
எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் கூட கொடுமைகள் தொடர்ந்துள்ளன. சரியாக தூங்கக் கூட விடாமல் வேலைவாங்கியுள்ளனர். பெரும் சிரமத்திற்குப் பின்னர் விட்டால் போதும் என்று தாய் மண்ணுக்கே திரும்பி விட்டார் வினோத்.
இவர்களைப் போல கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தி்னர் வேலை பார்க்கும் இடங்களிலும், சிறைகளிலும் கொடுமைக்குள்ளாகி வருகின்றனராம். இவர்களை மீட்கவும், அங்கு போய் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்கவும், மத்திய அரசும், மாநில அரசும் சற்று அக்கறை காட்ட வேண்டும் என்கிறது அயலக தொழிலாளர் நல அமைப்பு.












Click it and Unblock the Notifications