இலங்கை-சல்வார் கமீஸ் அணிந்து நாடாளுமன்றம் வந்த தமிழ் எம்.பி வெளியேற்றம்
கொழும்பு: இலங்கையில் சல்வார் கமீஸ் அணிந்து வந்த காரணத்துக்காக தமிழ் பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் சார்பில் கிழக்கு மட்டக்களப்பு பகுதி எம்பியாக இருப்பவர் தங்கேஸ்வரி கதிராமன். இலங்கை நாடாளுமன்ற கூட்டத்துக்கு வந்த அவர் சல்வார் கமீஸ் அணிந்து வந்திருந்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள் கண்டிப்பாக சேலை தான் அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு இருக்கிறது. முஸ்லிம் பெண் எம்.பிக்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு கொடுக்கப்ப்டடுள்ளது. இந்நிலையில் தங்கேஸ்வரி சல்வார் கமீஸ் அணிந்து வந்ததை அடு்தது அவர் பெண்களுக்கான உடை விதி மீறல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவர் இன்று முழுவதும் சபைக்குள் வரக்கூடாது என கூறப்பட்டது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த தங்கேஸ்வரி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இப்படி ஒரு உடை கட்டுபாடு இருப்பது எனக்கு இன்று தான் தெரியும். சமீபத்தில் வயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதால் சேலை அணிய முடியவில்லை. அதனால், தான் சல்வார் கமீஸ் அணிந்து வந்தேன் என்றார் அவர்.
3 தமிழ் எம்.பி.க்களுக்கு விடுமுறை கிடைத்தது...
இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்துக்கு வரமுடியாத காரணத்தை தெரிவித்து செல்வம் அடைக்கலநாதன், ஜெயனாந்த மூர்த்தி மற்றும் கஜேந்திரன் ஆகிய மூன்று தமிழ் எம்.பிக்களும் மருத்துவர்களின் சான்றிதழுடன் விடுமுறை கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இவர்கள் மூவரும் வெளி நாடுகளுக்கு சென்று நாட்டுக்கு எதிராக பேசுவதாக குற்றம்சாட்டி வரும் இலங்கை அவர்களுக்கு விடுமுறை கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென மனம்மாறிய இலங்கை நாடாளுமன்றம் அவர்களுக்கு விடுமுறை கொடுத்துள்ளது.