திருச்செந்தூர் அருகே காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின்
உடன்குடி: திருச்செந்தூர் அருகே காயத்துடன் டால்பின் கரை ஒதுங்கியது.
திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கடற்கரையில் நேற்று காலை 9 மணியளவில் டால்பின் குட்டி கரை ஒதுங்கியது.
6 அடி நீளமும், 150 கிலோ எடையும். கொண்ட இந்த டால்பினின் உடலில் காயங்கள் இருந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக அதை மீட்டு கரிமேனியாறு கடலில் கலக்கும் பகுதியில் கொண்டு போய் விட்டனர். தூத்துக்குடியில் உள்ள மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அங்கிருந்து யாரும் வராததால் இரவு 7 மணியளவில் உடன்குடி கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு டால்பின் குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இதை மீண்டும் கடலில் கொண்டு போய்விட்டனர்.
கரை ஒதுங்கிய டால்பின் குட்டியை அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
மீன்வளத் துறையின் அலட்சியம்...
மணப்பாடு கடற்கரையில் டால்பின் குட்டி காயங்களுடன் கரை ஒதுங்கியதை பொதுமக்கள் காலை 10 மணிக்கே தூத்துக்குடி மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அலட்சியத்துடன், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் திருச்செந்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களோ இங்கு யாரும் ஆட்கள் இல்லை. பேசாமல் நீங்களே டால்பின் குட்டியை கடலில் விட்டு விடுங்கள் என்றனராம். இதையடுத்து டால்பின் குட்டியை மீண்டும் படகில் அடிபடாமல் பொது மக்களே அதை மீட்டு கடலில் விட்டனர்.












Click it and Unblock the Notifications