மதுரை கோர்ட் வளாகத்தில் 28 வக்கீல் அலுவலகங்கள் உடைப்பு
மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள 28 வக்கீல் அலுவலகங்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து வக்கீல்கள் மேலூர் ரோட்டில் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. வேலைநிறுத்தப்
போராட்டத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 98 அறைகளை கொண்ட மூன்று மாடி கட்டிடம் இருக்கிறது. இங்கு மக்கள் வழக்கு தொடர்பாக வக்கீல்களை சந்திக்கும் வகையில் வக்கீல்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த அறைகளில் வக்கீல்கள் தங்களது வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளனர். இந் நிலையில் நேற்று அதிகாலை வக்கீல்கள் அலுவலகம் இருக்கும் பகுதிகளுக்கு சென்ற நீதிமன்ற காவலாளி ஒருவர் அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் மதுரை மாவட்ட நீதிபதி ரத்னராஜூக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே இந்த செய்தி வேகமாக பரவ வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் அப்பகுதியில் குவிய துவங்கினர்.
வக்கீல்கள் தங்களது அறைகளுக்கு சென்று பார்த்த போது சுமார் 28 அறைகள் உடைக்கப்பட்டது. அதிலிருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு வழக்கு ஆவணங்கள் அறை முழுவதும் சிதறி கிடந்தன.
இதை தொடர்ந்து நீதிபதி ரத்னராஜ், காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
எதாவது வழக்கு தொடர்பான ஆவணங்களை திருட மேற்கொண்ட முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வக்கீல்களின் அறைகளை உடைத்தவர்களை போலீசார் உடனே பிடித்து கைது செய்ய வேண்டும் என கோரி மேலூர் சாலையில் வக்கீல் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வக்கீல்கள் சங்கம் கண்டனம்...
இந்த சம்பவத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் பால்கனகராஜ் கூறுகையில், சம்பந்தபட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் வக்கீல்கள் சங்கத்துடன் இணைத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கல் சங்கம் பிரதிநிதிகள், தலைமை நீதிபதி எச்எல் கோகலேவை சந்தித்து புகார் கொடுத்தனர்.
வக்கீல்கள் 16ல் நீதிமன்ற புறக்கணிப்பு...
இதை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு வரும் 16ம் தேதி நீதிமன்றத்தை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளது.